Thursday, December 25, 2008

அதியுடன் ஒரு மழைகாலம்

அம்மாவிற்கு தெரியாமல் மழையில் நனையும் அதியை
வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்
என்னையும் நனைய அழைத்தாள்
கைபேசி, காகிதங்கள், என பத்திரப்படுத்தி வருவதற்குள்
மழை நின்று போயிருந்தது.

Thursday, December 18, 2008

மும்பை பயங்கரவாத தாக்குதலின் பிறகு

அதி அப்பாவின் இரு சக்கர வாகனத்தின்
முன்புறம் அமர்ந்து வந்தாள்
ஊடகத்தின் உதவி கொண்டு
விரல்களை துப்பாக்கி என மாற்றி
எதிர்படுவோரை சுட ஆரம்பித்தாள்
ஒரு மனநலம் தவறியவன் தவிர்த்து
அவள் சுட்ட அனைவரும்
பயங்கரவாதிகளே

Monday, December 8, 2008

சில நாட்களுக்கு முன் அதி தனியாக வீட்டில் இருந்தால்

அவளுடன் விளையாட கடவுள் வந்தார்

யாருமற்ற இடத்தை பார்த்து

"இங்கயே இரு சு .... சூ.... போயிடு வந்தறேன் '_என

கடவுளை வெளியே தள்ளி கதவை சாத்தி போனாள் அதி.

Friday, December 5, 2008

தொலை துரத்தில் இருக்கும் அம்மாவிற்கு

கைபேசியில் திரும்ப திரும்ப

பேச தெரிந்த ஒரே வார்த்தை

சாப்பிட்டாயா சாமி என்பது மட்டுமே

சாப்பாட்டில் அக்காவின் உதிர்ந்த தலைமுடி

நரைத்திருந்தது:

எடுத்து போட்டு சாப்பிட முனைகையில்

கை கழுத்தை இருக்க சுற்றி

விழி பிதுங்க வைத்தது.

Monday, December 1, 2008

மனசு காத்தாடி போல

எவ்வளவு உயரம் போனாலும்

ஆடிக்கொண்டே இருக்கும்

எல்லா கதவு சன்னல்களையும்
இறுக சாத்தியிற்று இன்னும் பயமாய் இருக்கிறது
வியாதிக்கு மருந்து சாப்பிடாத அம்மாவின்
ஆழ்ந்த உறக்கம்.
பின்புறம் கிழிந்து போன டிரௌசர்
எல்லோருக்கும் தபால் பெட்டியாய் தெரிய
அவளுக்கு மட்டும் பட்டம் பூச்சியாக தெரிந்ததம்
தேக்கி இருக்கும் மழை நீரில்
விழையாடும்
குழந்தைகளுக்காக
இந்த அரசாங்கத்தை
மன்னிக்கலாம்.